தமிழின துரோகிகளே வாரீர் மெரீனா கடற்கரைக்கு!

Tuesday, June 7, 2011
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipIkhQVskX7Hbv-UaCy8adZx43cO0gHH8AZ_H6YkcrGACYo1056n_E25X0W86cXGHrObPRObImAALY9vhnvmlZXYFvMgneQMiDiK-xyWo_k6TqkzTb7pR7lSuDLc42RDgrpn3N4GmDkPA/s1600/Light+a+Candle+2.JPG


சிங்கத்தமிழர்களே வாரீர்!
மெரீனா கடற்கரைக்கு என்று 
நம்மை அழைக்கிறார்கள்
இனப்படுகொலையை கண்டு
நொந்து நூலானவர்கள்!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
அவர்கள் அழைத்த  நாம்தான் 
தமிழின துரோகிகள் என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
IPL ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

பாவம் அவர்களுக்கு தெரியாது 
நம் இனம்
அழிந்துகொண்டிருந்த போது 
சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் 
என்று!

போட்டியிட்ட  63  இடங்களை  கூட
தோற்கடிக்க முடியாத
தமிழின துரோகிகள் 
நாம்!

காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட
இனப்படுகொலையை மறந்து
சீமானை காரணம் சொன்ன
ஈனப்பிறவிகள் 
நாம்!

இந்த பாவமண்ணில்
வாழ பிடிக்காமல்தான்
போய் சேர்ந்துவிட்டான்
முத்துக்குமரன்!

இதோ நம்மை அழைக்கிறார்கள் 
செய்த பாவத்தை கழுவ 
மெரீனா கடற்கரைக்கு!

இரத்தாறு ஓடும்... காட்டாறு ஓடும்...
என்று சொன்னவர்களெல்லாம் 
ஓடிவிட்டார்கள்
தேர்தலில் கூட நிற்க
முடியாமல்!

அங்கே மிச்சமீதி உயிரை 
கையில் பிடித்துக்கொண்டு 
நிர்கதியாய் நிற்கும்
நம் இன உறவுகளுக்கு
ஆறுதல் கூறவாவது வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

கருணாவுக்கும், கருணாநிதிக்கும் 
தமிழின துரோகி
பட்டம் கொடுத்ததெல்லாம் போதும்
வந்து சேருங்கள்
இனியும் 
தமிழின துரோகியாக வாழாமல்
மெரீனா கடற்கரைக்கு!

இனத்தவன் சாகும்போதுதான்
குரல் கொடுக்கவில்லை
போஸ்ட் மாட்டம்
செய்ய சொல்லவாவது
குரல் கொடுப்போம் வாருங்கள் 
மெரீனா கடற்கரைக்கு!

அக்காவுக்கு பங்க்சன்
ஆயாவுக்கு தவசம் என்று
 காரணம் சொல்லாமல் 
இதற்காகவாவது வந்து சேருவோம் 
மெரீனா கடற்கரைக்கு!